வரலட்சுமி கணவருக்கு அரசு வேலை...! உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு அமைச்சர் மா.சு. ஆறுதல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்தினரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து 193 வது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வரலட்சுமி உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கு மேலாக மின்வடங்களை புதைக்காதது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மின்சார ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வரலட்சுமி உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வரலட்சுமிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவரது கணவர் வேலைக்குச் செல்லாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி! எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க… கதறி துடிக்கும் குழந்தைகள்..!
தாயின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்தினரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து இருபது லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரலட்சுமியின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் வரலட்சுமி கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: பெருந்துயரம்... மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் பலி! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்..!