PLEASE வேலைக்கு வாங்க! போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.
இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்… ஐகோர்ட்டில் அவசர முறையீடு!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. 7 கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் 12 ஆவது நாளை எட்டி உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பணி பாதுகாப்பு, பண பலன்களை சென்னை மாநகராட்சி 100% உறுதி செய்யும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுநலன் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்ப தூய்மை பணியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு ஏதாச்சு பேச தெரியுதா? சேகர்பாபுவ நாங்க கேட்டோமா? கொந்தளித்த தூய்மை பணியாளர்கள்