புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்! எல்லையோர தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை!
புதுச்சேரியில் தேர்தல் முடியும் வரை 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி தேர்தல் முடியும் வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்படிபொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடுவதற்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தடியடி நடத்தக்கூடிய ஆயுதங்களை ஏந்திச் செல்ல அனுமதி கிடையாது.
புதுச்சேரி மாநில எல்லைகளுக்கு மிக அருகில் உள்ள தமிழகப் பகுதிகளில் மது விநியோகத்தைத் தடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: புதுச்சேரி எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை இந்த விடுமுறை அமலில் இருக்கும். மது கடத்தல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கப் பறக்கும் படையினர் எல்லையோரங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் புதுச்சேரி தேர்தல் களம்..!! ஏப்.3ம் தேதி மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரதமர் மோடி..!!
வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் முக்கியச் சந்திப்புகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். வெளிநபர்கள் தங்குவதைத் தவிர்க்க விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 09-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!