என்கிட்ட கோடி இல்லை!! ஆனா கொள்கை இருக்கு! என்னை நம்புங்க! ஏமாற்ற மாட்டேன் - சீமான் உருக்கம்!
''என்னிடம் கோடியில்லை; ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கு; என்னை நம்புங்கள், உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னிடம் கோடியில்லை; ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கு. என்னை நம்புங்கள், உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மதுரையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், “60 வருடமாக அதே பழசான இரட்டை இலை, உதய சூரியன் என்ற இரு கட்சிகளையும் மக்கள் தொடர்ந்து நம்பி வருகிறார்கள். உழைக்கும் விவசாயிகளை மறந்துவிட்டு, கார், செல்போன், டிவி என்று பேசுகிறார்கள்.
கொரோனா காலத்தில் மக்கள் அரிசி, பருப்பு, மளிகைக்காகத்தான் வரிசையில் நின்றார்கள். சோறு இல்லாமல் எப்படி வாழ முடியும்? விவசாயி இல்லையென்றால் சோறு இல்லை. அதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!
மேலும், “என் மகனிடம் கோடி இல்லை, ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கிறது. காசு இல்லை, ஆனால் நல்ல கருத்து இருக்கிறது. என் மக்களை இந்தப் பூமியில் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும். என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். மக்களுக்கு சிறந்த மருத்துவம், நல்ல குடிநீர், நஞ்சு இல்லாத உணவு கொடுக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. என்னை நம்புங்கள், உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
சீமான் தொடர்ந்து, “இந்த இரு திராவிடக் கட்சிகளும் என்ன செய்தன? இன்னும் எத்தனை காலம் உதயசூரியனையும், இரட்டை இலையையும் கட்டி அழப் போகிறீர்கள்? ரூ.1000, ரூ.2000, ரூ.8000 கூப்பன் தருகிறேன் என்று சொல்வது ஏமாற்று வேலை. மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
“குடிக்க நீர் கொடுக்க முடியாத வக்கற்ற அரசு, தவித்த வாய்க்கு தண்ணீரை விற்கும் திறனற்ற அரசு. மலையையும் மண்ணையும் திருடுபவர்களுக்கு ஓட்டு போடப் போகிறீர்களா? பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்பதை மாற்ற வந்த நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளுக்கு ஓட்டளியுங்கள்” என்று சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
நாம் தமிழர் கட்சியின் இந்தப் பிரசாரம் தமிழக தேர்தல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீமானின் உணர்ச்சிகரமான பேச்சு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!