மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!
மராட்டியத்தில் கோவில் மேற்கூரை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தின் பிரசித்தி பெற்ற கோயிலில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் முன்பகுதியில் அமைந்த சபா மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கோயிலில் தற்போது சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது கோயிலில் வழிபாட்டிற்காக வந்திருந்த பக்தர்கள் பலர் மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் சிக்கினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் பர்பானி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோயிலின் சபா மண்டப மேற்கூரை மாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. பர்பானி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். வார இறுதி மற்றும் விழா நாட்களில் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மொத்த பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உ.பி.யில் சோக சம்பவம்: திடீரென இடிந்து விழுந்த பாலம்.. 6 பேர் பரிதாப பலி..!!