3 வாட்டி மிஸ் ஆச்சு.. இப்போ டேட் பிக்ஸ் ஆச்சு! ஜூன் 19ல் விண்வெளி செல்கிறார் சுபான்ஷூ சுக்லா..!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும்.
ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
இதையும் படிங்க: இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!
இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறார்.
இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பணி முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது முறையாக மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவை ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய செய்திக்குறிப்பில், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உடனான சந்திப்பின் போது, பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது.
1984 ஆம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி டெல்லியிலும் ஒலிக்கப்போகும் கமல்ஹாசனின் குரல்.. போட்டியின்றி தேர்வாகிறார்கள் திமுக, அதிமுக வேட்பாளர்கள்..!