அதிரடியாக வருகிறது "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"..!! வரும் 27ம் தேதி தொடக்கம்..!!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை வரும் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force - SSF) என்ற பெயரில் புதிய சிறப்பு போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு இந்தப் படையை அமைக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தது. இந்தப் படையின் முதல் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரே இந்தப் படைக்கு ‘சிங்கப்பெண்’ என்ற பெயரைப் பரிந்துரை செய்ததாகவும், முதலமைச்சர் விஜய் அதை ஏற்று அவரைத் தலைமைப் பொறுப்பில் நியமித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறப்பு அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்தப் படையின் முக்கிய நோக்கம். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், ஐடி நிறுவனங்கள், சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடும்.
இதையும் படிங்க: பாஜகவுடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது! புதிய தவெக அரசுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்!
சேலம் மாநகரில் முதல் கட்டமாக இந்தப் படை தனது பணியைத் தொடங்கியுள்ளது. மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியின் முன்னிலையில் கடந்த 14-ம் தேதி இயங்கத் தொடங்கியது. படைக்கு தேவையான நான்கு சக்கர வாகனங்கள், பாடி வான் கேமராக்கள், தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், படைக்கென தனித்துவமான லோகோ மற்றும் பிரத்யேக சீருடை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
வருகிற 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இந்தப் படையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படையை தொடங்கி வைக்கிறார். டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 30 ரோந்து வாகனங்கள் தயாராக உள்ளன. இந்தப் படை மூலம் பெண்களுக்கு எதிரான தொல்லைகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் படிப்படியாக இந்தப் படையின் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்க இந்தப் படை தயாராக உள்ளது.
இதையும் படிங்க: மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!