×
 

"ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் உயர்கல்வி தொடர்பான முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் முக்கிய முகமாக விளங்கிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடித்த பிறகு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற அமைதியான மாணவர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது எந்தவித குற்றவழக்கும் பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆவணத்தையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!

இந்தப் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதில் மாணவர்களும் காவல்துறையினரும் காயமடைந்தனர்.

இதற்கிடையில், ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்தபடியே போராட்டத்தை தொடர்ந்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அதேநேரத்தில், ஜூலை 20 அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படக்கூடாது என்று வாங்சுக் வலியுறுத்தியிருந்தார். இதை ஏற்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 'எக்ஸ்' பதிவில், "நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலேயே இந்த முடிவை எடுத்தேன். ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் குறித்து விரைவில் தனி காணொளி வெளியிடுவேன். அனைவரும் அமைதியை பேண வேண்டும்" என்று வாங்சுக் தெரிவித்துள்ளார். இருப்பினும், நீட் விவகாரத்தில் மாணவர்கள் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தேசிய அளவில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நான் நல்லா இருக்கேன்!! பேரணியில் பங்கேற்கணும்! மருத்துவ அறிக்கைக்கு இடையில் அனுமதி கேட்கும் சோனம் வாங்சுக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share