சுயசரிதையில் மோடி, RSS பெயர்களை நீக்க முடியாது! அடம்பிடிக்கும் சோனியாகாந்தி! பின்வாங்கிய Penguin!
ஆசிரியர் திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புத்தகத்தை வெளியிட முடிவு செய்யவில்லை என்ற தகவல் சரியானதல்ல என்றும் கூறியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சுயசரிதை புத்தகத்தை சுற்றி தற்போது புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. ‘Belonging: A Journey of Love’ என்ற 544 பக்க புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் நிலையில் இருந்த Penguin Random House India, தற்போது தான் இந்திய பதிப்பாளர் அல்ல என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பான விவாதமும் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.
சோனியா காந்தியின் வாழ்க்கையில் இத்தாலியில் கழித்த இளமைக்காலம் முதல் ராஜீவ் காந்தியை சந்தித்தது, அவருடனான காதல் மற்றும் திருமணம், இந்திரா காந்தியின் குடும்பத்தில் இணைந்தது, ராஜீவ் காந்தியின் பிரதமர் காலம், அவரது படுகொலைக்குப் பிறகு சோனியா காந்தி அரசியலுக்குள் வந்தது உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் இந்த சுயசரிதையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் நவம்பர் 10ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியிடப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த Alfred A. Knopf ஏற்கனவே அறிவித்திருந்தது. இது Penguin Random House-ன் ஒரு பிரிவாகும். முதல் பதிப்பாக ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!
இதற்கிடையே, இந்தியாவில் புத்தகத்தை வெளியிடுவது தொடர்பாக Penguin தரப்புக்கும் சோனியா காந்திக்கும் இடையே சில ஆசிரியர் திருத்தங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, RSS மற்றும் சீனா தொடர்பான பகுதிகளில் மாற்றங்கள் அல்லது நீக்கங்கள் கோரப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் முன்வைத்துள்ளார்.
ஆனால் இதற்கு Penguin Random House India முற்றிலும் வேறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. ஒரு பதிப்பாளராக கையெழுத்துப் பிரதியை உண்மைத் தகவல்களுடன் சரிபார்ப்பதும், புத்தகத்தின் நலன் கருதி ஆசிரியரிடம் பரிந்துரைகளை வழங்குவதும் தங்களது இயல்பான பொறுப்பு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆசிரியர் திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புத்தகத்தை வெளியிட முடிவு செய்யவில்லை என்ற தகவல் சரியானதல்ல என்றும் கூறியுள்ளது. சோனியாவுடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் Penguin தெரிவித்துள்ளது.
Penguin இந்திய வெளியீட்டில் இருந்து விலகிய நிலையில், பல்வேறு பதிப்பகங்கள் இந்த புத்தகத்தை வெளியிட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக HarperCollins இந்திய வெளியீட்டு உரிமையை பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை HarperCollins தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் சோனியா காந்தியின் ‘Belonging’ புத்தகம் வெளியாவதற்கு முன்பே அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தகம் வெளியாகும் போது அதில் இடம்பெற்றுள்ள அரசியல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் அவமதிப்பு?! சோனியா காந்தி மீது போலீசில் புகார்! 3 ஆண்டு சிறை வரை தண்டனை?