Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று முக்கிய மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் உணர்ச்சி பொங்கப் பேசிய விஜய், முந்தைய திமுக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் விட்டுச் சென்றதாகவும், தமிழ்நாட்டின் நிதி நிலை மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
“கஜானா காலியாக உள்ளது. பொறுப்பு கொடுத்துள்ளீர்கள், போதிய அவகாசம் கொடுங்கள்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் நடத்துவேன் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!
இதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடனடியாக பதிலளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். பதவியேற்ற உடனே கையெழுத்திட்ட அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 10, 2026
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…
ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது: “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும். ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம், மத்திய அரசின் ஓரவஞ்சனை ஆகியவற்றை சமாளித்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. பிப்ரவரி பட்ஜெட்டிலேயே நிதி நிலையை தெளிவாகச் சொல்லியிருந்தோம்” என்றார்.
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாக அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், விரைவில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதை நிச்சயம் புரிந்துகொள்வீர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர எனது வாழ்த்துகள்” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயின் முதல் உரையிலேயே கடன் விவகாரத்தை எடுத்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு வாதங்களும் சமூக ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. புதிய அரசு எப்படி செயல்படும் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!