காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!
உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான, தரமான சேவை மக்களுக்கு வழங்க ஆணையர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கும் நோக்கில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான உத்தரவுகளை அனுப்பியுள்ளார்.
அதில், பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நகர சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் தொடர்பாக ஆணையர்கள் தினசரி காலை 7 மணிக்கு முன்பாகவே கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை நேரடியாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் தூய்மை பராமரிப்பு பணிகளை மூத்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் வருகைப் பதிவை தினசரி கண்காணித்து தேவையற்ற விடுப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!
சாலைகளில் தேங்கி கிடக்கும் மண் மற்றும் குப்பைகள் தினசரி அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், காலி இடங்கள், நீர்நிலைகள் மற்றும் சாலையோரப் பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் உள்ளனவா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகள் குறித்து புகார் வந்தால், 24 மணி நேரத்திற்குள் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் மூலம் உள்ளாட்சி நிர்வாக சேவைகளின் தரம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!