மைக் மிதக்குது பாருங்க! சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலகலப்பான கலந்துரையாடல்..!
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை 2027ல் செயல்படுத்த திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது.
ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கியை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: இந்த டைம் மிஸ்ஸே ஆகாது.. நாளை விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷு சுக்லா..!
டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். மொத்தம் 60 ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில், ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடினார். விண்வெளி பயணத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுக்கு முதலில் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது நன்றி தெரிவித்த சுபான்ஷு சுக்லா, இந்திய அரசின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது இன்று தெரிவித்தார். பேசிக் கொண்டிருக்கும்போது மைக் மிதப்பதாக செய்து காட்டிய சுபான்ஷு சுக்லா, இதுபோல தான் அனைத்து பொருட்களும் மிதக்கும் என்று தெரிவித்தார். அப்போது, இதனை ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உங்கள் விண்வெளி பயணம் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு உத்தேகம் தரும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுபான்ஷு சுக்லா, இது என்னுடைய பயணம் மட்டுமல்ல, ஒரு தேசத்தின் பயணம் என்றும் ஒரு புதிய அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விண்வெளிக்கு பாசிப்பருப்பு அல்வாவும், ரசமும் கொண்டு சென்றுள்ளதாக பிரதமர் மோடியுடன் கலகலப்பான உரையாடலின் போது சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்ப்பதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!