சூப்பர் எல்-நினோ வார்னிங்!! தப்புமா தமிழகம்?! பெரும் காலநிலை அச்சுறுத்தல்! அரசுக்கு பறந்த பேரிடர் எச்சரிக்கை!
சூப்பர் எல்-நினோ சூப்பர் எல்-நினோ தாக்கத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்-அமைச்சருக்கு அவர் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ள நிலையில், அந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த மனுவில், உலகளவில் பெரும் காலநிலை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூப்பர் எல்-நினோ நிகழ்வு உருவாகும் சூழல் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்வு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் ஆரம்பகட்ட விளைவுகள் தற்போது பல்வேறு பகுதிகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களின் நீர்மட்டம் குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 111 அடியாகவும் குறைந்துள்ளதாகவும், வைகை அணையில் நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வானிலை மையத்தின் கணிப்பை தப்பாக்கிய 'எல் நினோ'! கேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!
இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஒருபுறம் வறட்சி சூழலும், மறுபுறம் திடீர் கனமழை மற்றும் வெள்ள அபாயமும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 முதல் 18 மாதங்கள் தமிழகத்திற்கு சவாலான காலமாக அமையக்கூடும் என்றும், வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள், விவசாய பாதிப்புகள், பெருமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை மாநிலம் சந்திக்க நேரிடலாம் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த காலநிலை மாற்ற சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஹப்பாடா!! நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்!! மக்களுக்கு சற்றே ஆறுதல்!