போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
நீட் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள முயல வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதை அதிகாரிகள் கேட்டறிந்து புரிந்துகொள்ள முயல வேண்டும் என்றும், காவல்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது வன்முறையைத் தூண்டிய போராட்ட ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது, காவல்துறையின் தடையை மீறி நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மோதல்கள் ஏற்பட்டதால் தான் தடியடி நடத்தப்பட்டது. இத்தகைய போராட்டங்களை அனுமதிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். எனவே, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த சம்பவங்களுக்கும் வன்முறைக்கும் போராட்ட ஏற்பாட்டாளர்களையே பொறுப்பேற்க வைக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!
இதற்குப் பதிலளித்துப் பேசிய நீதிபதிகள், போராட்டக் களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பாக, இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகக் கையாள வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி அமைதிப்படுத்துவதோடு, அவர்களின் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும். போராட்டங்களைக் கையாளும் போது காவல்துறையினர் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதோடு, அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பதே முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இந்த மனுவை நீட் போராட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!