சமூக நீதி வென்றது! ஓபிசி கிரீமிலேயர் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்!
பெற்றோரின் வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஓபிசி (OBC) பிரிவினரின் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அந்தஸ்தை தீர்மானிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் (வசதி படைத்தோர்) வரம்பைத் தீர்மானிப்பதில் பெற்றோரின் வருமானத்தை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனதார வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், தகுதியிருந்தும் இடம் மறுக்கப்பட்ட மாணவர்களுக்குச் சூப்பர் நியூமரரி இடங்களை உருவாக்கி நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோரின் வருமானத்தை மட்டும் வைத்து ஓபிசி பிரிவினரை வசதி படைத்தோராக முடிவு செய்ய முடியாது. அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் பணியின் தன்மை ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளை, அரசுப் பணியில் உள்ளவர்களின் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு வருமான வரம்பில் பாரபட்சம் காட்டுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: என்சிஆர்டி பாடப்புத்தக சர்ச்சை... மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு! உச்சநீதிமன்றம் விசாரணை!
இந்தத் தீர்ப்பு குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மண்டல் ஆணைக்குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்து 3 தசாப்தங்கள் கடந்தும், பல ஓபிசி பணியிடங்கள் ஒன்றிய அரசால் நிரப்பப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூக நீதிப் பயணத்தில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றும், தவறான கிரீமிலேயர் கணக்கீட்டால் இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி வேட்பாளர்களுக்கு, கூடுதல் இடங்களை (Supernumerary posts) உருவாக்கி உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசு, பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தைக் கிரீமிலேயர் கணக்கீட்டில் சேர்க்கக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் சமூக நீதி நிலைப்பாட்டிற்கு வலுசேர்த்துள்ளது.
இதையும் படிங்க: லாவண்யா மரண வழக்கு: "மதமாற்றம் நடக்கவில்லை" உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி அறிக்கை!