பாக். ராணுவத்திற்கு உளவு பார்த்தேன்.. பல ஷாக் தகவல்களை சொன்ன 26/11 குற்றவாளி ராணா..!
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உளவு பார்த்ததாக பல திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார் தஹாவூர் ராணா.
மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்க குடிமக்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்த நிலையில் அவரை இந்திய அதிகாரிகள் நாடு கடத்தி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா அழைத்து வந்தனர். அவரிடம் தேசிய புலனாய்பு படையினர் கடந்த 18 நாட்களாக விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அமெரிக்க சிறையில் கழித்த பிறகு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட தஹாவூர் ராணாவுக்கு இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயல்முறை பற்றி தெரியாது. அவர் அதைப் பற்றி தெரிந்து கொள்ள எல்லா வழிகளிலும் முயற்சித்தார். தஹாவூர் ராணா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கசாப்பைப் போலவே தனக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அஞ்சி, என்.ஐ.ஏ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து, சாக்குப்போக்கு சொல்ல முயற்சித்துள்ளார்.
இந்திய சட்டம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு வந்த தஹாவூர் ராணா, தனது விசாரணை எப்படி, எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அவர் அறிய விரும்பினார்? தன் மீதான குற்றச்சாட்டுகளின் விளைவு என்னவாக இருக்கும் என்று அவர் கேட்டார். நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், ராணாவுடனான அரை மணி நேர சந்திப்பின் போது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார். இந்த நேரத்தில், ராணா சட்டத்தின் ஒவ்வொரு பிரிவையும் புரிந்து கொள்ள முயன்றார். அடுத்த நடைமுறை என்னவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். விசாரணையின் காலம், சாத்தியமான தண்டனை குறித்து அவர் கேள்விகள் கேட்பது அவரது பயத்தை காட்டுகிறது.
இதையும் படிங்க: இந்தியா கூட சேராதீங்க... ஆப்கானிஸ்தான் காலில் விழுந்து கதறிய பாகிஸ்தான் தளபதி...!
பாதுகாப்பு காரணங்களால், தஹாவூர் ராணாவை டெல்லிக்கு வெளியே அழைத்துச் செல்லும் திட்டம் எதுவும் தற்போது இல்லை. அவர் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது ஒவ்வொரு செயல்பாடும் கண்காணிக்கப்படுகிறது. என்.ஐ.ஏ, ராணாவுக்கு தொழுகை நடத்த நேரம் அளித்துள்ளது. மேலும் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதிகளின்படி உணவு வழங்கப்படுகிறது. ராணா தொடர்ந்து சாக்குப்போக்குகளைச் சொல்லி தண்டனையிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
26/11 தாக்குதல்கள் குறித்து தனக்கு முழுதாகத் தெரியாது. தான் ஒரு கருவியாக மட்டுமே இருந்ததாகவும் அவர் பலமுறை கூறி வந்த நிலையில், என்.ஐ.ஏ.,விடம் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் டேவிட் கோல்மன் ஹெட்லியுடனான அவரது உரையாடல்கள், தாக்குதல் சதியில் அவர் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஆகியவை உள்ளன.
இப்படி ராணா சாக்குபோக்கு சொல்லி கொண்டு வந்த நிலையில், தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் பயின்றதாகவும், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியதாகவும், இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புக்கு உதவிட இந்தியா சென்றதாகவும் ராணா கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவத்திற்காக உளவு பார்த்ததாகவும், வளைகுடாப் போரில் தனக்கும் பங்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் 2008ல் தாக்குதல் நடத்தலுக்கு முன்னர் 2 நாட்கள் தங்கி இருந்ததாகவும், பயங்கரவதி ஹெட்லியுடன் தொடர்பில் இருந்தேன் என்றும் டெல்லி, புனே,கோவா என பல நகரங்களை சுற்றி வந்து நோட்டமிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாக்.-கிற்கு உளவு பார்த்திருக்கீங்க.. பணம் கொடுக்கலனா ஜெயில் தான்.. சைபர் மோசடியில் ரூ.22 லட்சம் இழந்த பெண்..!