ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபீத் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாராபீத் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் தாராபீத் கோவிலுக்கு வந்த யாத்ரீகர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாராபீத் பகுதியில் செயல்பட்டு வரும் நான்கு மாடி தனியார் ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான விருந்தினர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து பலர் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
தீ பற்றிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்ததாகவும், பின்னர் தீ வேகமாக பரவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!
இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்துக்குள் சென்று மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலர் புகை காரணமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலில் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தின் பயங்கரத்தை விவரித்துள்ளார். ஹோட்டல் முழுவதும் திடீரென புகை பரவியதால் மூச்சுவிடுவதற்கே சிரமமாக இருந்ததாகவும், வெளியேறுவதற்கான வழியை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புகை அதிகமாக இருந்ததால் பலரால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. மின்கசிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் கட்டிடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகாலை நேரத்தில் யாத்ரீகர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, தாராபீத் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவ சதி? டெல்லி போராட்டத்தை குறிவைத்த பயங்கரவாதி? அதிர்ச்சி தகவல்!