விமான விபத்தில் கருகிய உடல்கள்.. டாடா குழும தலைவர் எழுதிய உருக்கமான கடிதம்!
பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறிவிட முடியாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் கட்டாயம் துணை நிற்போம் என சந்திரசேகரன் தெரிவித்தார்.
குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவன விமானம், இப்போது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நயினார் தலைமையில் வாகனப் பேரணி... போலீசுக்கே தண்ணி காட்டிய பாஜகவினர்!
விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தன, பறவை மோதியது, எரிபொருள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது என யூகத்தின் அடிப்படையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான், உண்மை காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நிறுவனம் டாடா குழுமம். சமூக அக்கறை உடைய இந்த நிறுவனம் எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது.
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. என்ன நடந்தது என்பதை அறிய உங்களைப் போல் நாங்களும் பொறுமை காக்கிறோம். இது குறித்து விசாரிக்க இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த நிபுணர்கள் ஆமதாபாத் வந்துள்ளனர். அவர்களின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். என்ன நடந்தது என்பதை வெளிப்படைத் தன்மையுடன் கூறுவோம்.
ஒரு நபரின் இழப்பு என்பதே ஈடுசெய்ய முடியாதது எனும் போது, இத்தனை உயிர்களை இழந்தது மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறிவிட முடியாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் கட்டாயம் துணை நிற்போம்.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய போதே, பயணிகளின் பாதுகாப்பு தான் முதன்மையானது, அதில் கவனம் செலுத்துவோம் எனக் கூறியிருந்தோம்.
இப்போதும் அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மீது தான் என் எண்ணம் உள்ளது. நாங்கள் எப்போதும் அவர்களுடன் துணை நிற்போம் என சந்திரசேகரன் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தெரியாம நடந்த தப்பு இது.. மன்னிச்சுருங்க.. இந்தியாவிடம் SORRY சொன்ன இஸ்ரேல்..!