×
 

திருப்பதி லட்டின் தரம் காக்க ₹25 கோடியில் லேப்!! ₹3.5 கோடியில் பிரான்ஸ் மெஷின்!! அதிரடி காட்டும் ஆந்திரா அரசு!

லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யவும், பக்தர்களின் நம்பிக்கையை மீட் டெடுக்கவும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதத்தின் தரத்தை 100% உறுதி செய்ய ஆந்திர அரசு பெரிய முடிவு எடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான 'இ-நோஸ்' (மின்னணு மூக்கு) மற்றும் 'இ-டங்' (மின்னணு நாக்கு) என்ற அதிநவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் மிக முக்கியமானது. கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் (2019-2024) லட்டு தயாரிப்புக்கு 250 கோடி ரூபாய் அளவுக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், தற்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருமலையில் 25 கோடி ரூபாய் செலவில் உணவு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!

12,000 சதுர அடி பரப்பளவில் இரு அடுக்குமாடி கட்டிடமாக உருவாகி வரும் இந்த ஆய்வகத்தின் பணிகள் 90% நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்தார்.

வரும் மே மாதம் இந்த ஆய்வகத்தில் பிரான்ஸ் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 'இ-நோஸ்' நறுமணத்தை மிகத் துல்லியமாக பகுப்பாய்வு செய்யும். 'இ-டங்' சுவையை மனித நாக்கைப் போல உணர்ந்து ஆய்வு செய்யும். மனிதர்களால் கண்டறிய முடியாத நுண்ணிய கலப்படங்களை கூட இவை எளிதில் கண்டுபிடிக்கும்.

லட்டு தயாரிப்புக்கு பயன்படும் நெய், முந்திரி, திராட்சை, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட 60 வகை மூலப்பொருட்களின் தரம் இந்த இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். இதனால் பிரசாதத்தின் தரம் உலக அளவில் மிக உயர்ந்ததாக இருக்கும்.

இதற்கிடையே, லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த ஒரு நபர் கமிட்டியை எதிர்த்து பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, "குற்றவியல் வழக்கும் துறை ரீதியான விசாரணையும் வேறு வேறு. இரண்டும் தொடரட்டும்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

திருப்பதி லட்டு இனி முழுமையான தர உத்தரவாதத்துடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share