அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!
விசா ரத்து நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள அல்லது தற்போது தஞ்சம் கோரும் நிலையில் உள்ள வெளிநாட்டினரின் வணிகம் மற்றும் சுற்றுலா விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடியேற்ற விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குறுகிய கால பயணத்துக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வந்து, பின்னர் அங்கேயே தங்குவதற்காக தஞ்சம் கோரும் நடைமுறையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
2016 முதல் 2026 வரை வழங்கப்பட்ட B1 மற்றும் B2 விசாக்களில், அவற்றை பெற்றவர்கள் பின்னர் தஞ்சம் கோரியிருந்தால் அல்லது தற்போது தஞ்சம் கோரும் நிலையில் இருந்தால், அவர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?
இந்த நடவடிக்கையால் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அசோசியேட்டட் பிரஸ் தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இறுதியாக எத்தனை விசாக்கள் ரத்து செய்யப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. விசா ரத்து நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
விசா ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. குறிப்பாக நிலுவையில் உள்ள தஞ்சம் கோரும் வழக்குகள் கொண்டவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படாமல், அவர்களின் குடியேற்ற நிலை மாற்றப்படலாம். ஆனால், B1 அல்லது B2 விசா வைத்திருக்கும் வணிகப் பயணி அல்லது சுற்றுலாப் பயணி என்ற அந்தஸ்தை அவர்கள் இழக்க நேரிடும்.
“குறுகிய கால பயணத்துக்காக அமெரிக்கா வருவதாகக் கூறிவிட்டு, பின்னர் நிரந்தரமாக தங்குவதற்காக தஞ்சம் கோருபவர்களை கண்டறிந்து, அவர்களின் குடியேற்றம் அல்லாத விசாக்களை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் சட்டரீதியான சவால்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போது இது இறுதி ரத்து நடவடிக்கை அல்ல; திட்டம் மாற்றப்படவோ, சட்டரீதியாக தடுக்கப்படவோ வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!