×
 

ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இன்று நள்ளிரவு மத்தியஸ்த நாடுகள் முன்னிலையில் மீண்டும் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மேற்காசிய அரசியல் சூழலில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சமீப காலமாக ஈரான் தொடர்பான பதற்றம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வந்தது. குறிப்பாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் உலக நாடுகளில் எழுந்தது.

ஆனால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட மேற்காசிய நட்பு நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்து, ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த புதிய ராணுவ தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா முடிவு செய்தது. அதே நேரத்தில், அமைதி ஒப்பந்தத்திற்கான வரைவு தயாராகி வருவதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: டிரம்ப் முகத்தில் கரியை பூசிய ஈரான்... உலகையே ஸ்டன் ஆக்கிய முக்கிய அறிவிப்பு... அடங்காத அமெரிக்கா...!

இந்த சூழலில், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரானுடனான பேச்சுவார்த்தை இன்று நள்ளிரவு மீண்டும் தொடங்குகிறது. இந்த முயற்சி எந்த திசையில் செல்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். தேவையற்ற உயிரிழப்புகளை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான தீர்வுக்கான வாய்ப்பு இருப்பதால் தான் தாக்குதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

மேலும், முதற்கட்டமாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்து உடன்பாடு எட்டப்படும் என்றும், அதன்பிறகு ஈரானின் அணு திட்டம் மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான விரிவான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவு மேற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் சந்தை, சர்வதேச வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இதையும் படிங்க: ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share