×
 

போட்டது போட்டதுதான்..!! இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான 15% வரி தொடரும்..!! ஆட்டம் ஆடும் டிரம்ப்..!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், வரி விஷயத்தில் உறுதியாக இருப்பாக கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டு நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய கூட்டில் உரையாற்ற வேண்டும். இது நாட்டின் தற்போதைய நிலைமை, அரசின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கும் முக்கிய அறிக்கையாகும். 

இன்று (பிப்ரவரி 25, 2026) நடைபெற்ற இந்த உரையில், டிரம்ப் தனது ஆட்சியின் முதல் ஆண்டில் பெற்ற வெற்றிகளை பட்டியலிட்டு, அமெரிக்கா ஒரு புதிய பொற்காலத்தை எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். குறிப்பாக வர்த்தகக் கொள்கை மற்றும் வரி விஷயத்தில் தான் உறுதியாக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

ஏற்கெனவே, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளின் மீது டிரம்ப் பரஸ்பர வரி (reciprocal tariffs) விதித்திருந்தார். இதன்படி, அந்நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரியைப் போலவே அமெரிக்காவும் அவர்களின் இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் கொள்கையை அவர் பின்பற்றினார். ஆனால், இந்த வரிகளை விதிப்பதற்கு அவர் பயன்படுத்திய சட்டப்பிரிவு சட்டவிரோதம் என அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனால், அந்த வரிகள் ரத்து செய்யப்பட்டன.

இதையும் படிங்க: டிரம்ப் பேச்சை எடுத்ததால் முற்றிய வாக்குவாதம்..!! பெற்ற மகளையே சுட்டுக்கொன்ற தந்தை..!!

இருப்பினும், டிரம்ப் இதைத் தடுமாற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. மாற்று சட்ட வழிமுறையைப் பயன்படுத்தி, உலக அளவில் 15 சதவீத வரியை (global tariff) அமல்படுத்தியுள்ளார். இது Trade Act-இன் பிரிவு 122-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த வரி தற்காலிகமாக 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றாலும், அவர் இதை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

உரையில், “இந்த வரிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்; வெளிநாடுகள் நம்மை ஏமாற்ற முடியாது” என்று அவர் தெரிவித்தார். மேலும், தனது ஆட்சியின் முதல் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறினார். அமெரிக்கா மீண்டும் உலகின் முன்னணி சக்தியாக உயர்ந்துள்ளதாகவும், வர்த்தகத்தில் நியாயமான போட்டியை உறுதி செய்ய தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உரை மூலம், வரி மற்றும் வர்த்தகக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே, குறிப்பாக இந்தியா போன்ற வர்த்தகப் பங்காளிகளிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்பின் இந்த அணுகுமுறை எதிர்கால வர்த்தக உறவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது இனி தெரியவரும்.

இதையும் படிங்க: டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share