தூத்துக்குடி காவல் மரண விவகாரம்... அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!
தூத்துக்குடியில் இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோருக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞர் அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு முன்பாக நாகர்கோவிலிலும் ஒரு இளைஞர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி மாநிலம் முழுவதும் வேதனையை ஏற்படுத்திய நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்.
சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் ஏற்படாமல் அவர் உயிரிழந்தார். உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல் நிலையத்தில் சித்திரவதை நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "தவெககாரன்"...! குற்றவாளிகள் கூடாரமா TVK..? CM விஜய் மீது நயினார் தாக்கு..!
உடற்கூறாய்வு முடிந்து அருணாச்சலத்தின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அருணாச்சலத்தின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். நீதி விசாரணை நடத்த துணை நிற்போம் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும், காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்றும் அவர் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!