×
 

முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் விஜய் நெருக்கமானவர்களுக்கு அரசு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கான அரசாணைகள் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அரசு சார்ந்த பொறுப்புகளை வழங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அந்த நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்ற தொடக்க காலத்தில், முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த நியமனம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பின்னர், முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு தரப்பில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!

மேலும், முதல்வர் விஜயின் சமூக வலைதள குழுவில் செயல்பட்டு வந்த ஜெகதீஷ் மற்றும் உதவியாளர் ராம்குமார் ஆகியோருக்கும் முதல்வரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால், இதுகுறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதேபோல், தவெக தேர்தல் பிரசார காலத்தில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்ட பவுன்சர் நயீம் மூஸாவும் தற்போது முதல்வரின் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பொறுப்பு என்ன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், முதல்வர் விஜயின் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த குரு, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டதாகவும், தவெக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யா, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சமூக ஊடகப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தபோது வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், முக்கிய நியமனங்கள் தொடர்பான தகவல்கள் முழுமையாக வெளியாகாதது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் பட்சத்தில் மட்டுமே இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர் பதவி ஒதுக்கீட்டில் தவெக மீது அதிருப்தி? காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்? புதிய சலசலப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share