மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!
பெட்ரோலிய பொருட்களுடன் ஹார்மூஸ் ஜலசந்தியை 2 வர்த்தக கப்பல்கள் இன்று கடந்துள்ளன. அவை இந்தியாவை நோக்கி வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பெரும் பதற்றத்தில் உள்ளது. ஈரான் ஜலசந்தியை மூடியதாக அறிவித்ததால், அதை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து பெட்ரோலியப் பொருட்களுடன் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் இன்று பயணித்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய கடற்படை தயாராக உள்ளது. விரைவில் கூடுதல் கப்பல்களும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்கள் அல்லது இந்தியக் கப்பல் பணியாளர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: தரைவழி தாக்குதல் தேவையே படாது!! ஈரானை ஈசியா ஜெயிச்சிருவோம்!! அமெரிக்க அமைச்சர் அசால்ட் பதில்!
அவர் மேலும் தெரிவித்ததாவது: “பாரசீக வளைகுடா பகுதியில் தற்போது 20 இந்தியக் கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 540 இந்தியக் கப்பல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியக் கடற்படை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்றார்.
கடந்த நான்கு வாரங்களாக தொடரும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்க மோதல் உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூலம் உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுவதால், இங்கு ஏற்படும் இடையூறு உலக நாடுகளை பாதிக்கிறது.
இந்தியா தனது கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முழு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியக் கடற்படை ஏற்கெனவே பாரசீக வளைகுடா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலக நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் அமைதியும், இயல்பான போக்குவரத்தும் விரைவில் திரும்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தியா தனது பொருளாதார நலன்களையும், கப்பல் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!