Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தினால் பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
யுபிஐ மூலம் பணம் அனுப்ப இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ள நிலையில், பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முக்கிய விளக்கம் அளித்துள்ளது. யுபிஐ பணப்பரிவர்த்தனை பயனர்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், சிறிய வர்த்தகர்களுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்காக கட்டணம் விதிக்கப்படாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு வழங்கப்படும் கட்டண விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் விதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மின்னணு பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தும் வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யலாம் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் தினசரி பணம் செலுத்தும் கோடிக்கணக்கான பயனர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது.
இதையும் படிங்க: இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் இனி பணம் செலுத்தலாம்..!! UPI-ல் விரைவில் வருகிறது புதிய வசதி..!!
இதுகுறித்து பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வெளியிட்ட விளக்கத்தில், வணிகர் சேவைக் கட்டணம் என்பது பொருந்தும் இடங்களில் வணிகர்களுக்கும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ளது. இதை நுகர்வோர் ஒவ்வொரு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் பணம் செலுத்த வேண்டும் என பொருள் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மேலும், சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நடத்தும் பாரம்பரிய பலசரக்கு கடைகள் போன்ற சிறு வணிகர்கள் வணிகர் சேவைக் கட்டணத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிறிய வணிகர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சூழல் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் யுபிஐக்கு உடனடியாக கட்டணம் விதிக்கப்பட உள்ளது என்ற தகவலுக்கு தற்போது ஆதாரம் இல்லை. வழக்கம்போல், பயனர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேமெண்ட்ஸ் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மட்டுமே நம்பாமல், மத்திய அரசு அல்லது தொடர்புடைய அமைப்புகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பது முக்கியம்.
இதையும் படிங்க: பண மூட்டை நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு தள்ளுபடி! ‘மலிவான விளம்பரம்’ என உச்ச நீதிமன்றம் கருத்து!