'ஒரு பூவில் உள்ள இரு இதழ்கள்'.. வடகலை - தென்கலை விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் கருத்து..!
வடகலை தென்கலை ஆகிய இரு பிரிவுகளும் ஒரு பூவில் உள்ள இரு இதழ்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோயிலில், யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பான வழக்கு, உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கோயிலில் இருதரப்பினரும் பிரபந்தங்கள் பாடக் கூடாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மே 12ம் தேதி காலையிலேயே, இக்கோயிலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகபடி கண்டருளியபோது, பெருமாளின் முன்பு மந்திர புஷ்பம் பாடி தென்கலை பிரிவினர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அந்த வாக்குவாதம் மோதலாக மாரிஅயதால், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.
இதையும் படிங்க: நீட் ரிசல்ட் வெளியிட தடையில்லை..! மறுதேர்வு கோரிய மாணவர்களின் வழக்கு தள்ளுபடி..!
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வடகலை மற்றும் தென்கலை இரு பிரிவினருக்கு இடையே பலதரப்பு பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் நிம்மதியாக சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சில சமயங்களில் எல்லை மீறி தகாத வார்த்தைகளில் பேசி கொள்வதும், அவ்வப்பொழுது அரங்கேறுவதால் பொதுமக்களும் பக்தர்களும் அவதி அடைகின்றனர்.
பல ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் சின்னக்காஞ்சி விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு வெளியே தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோயிலில் விழாக்கள் அமைதியாக நடக்க கோவில் செயலர் அலுவலர் உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகலை - தென்கலை ஆகிய இரு பிரிவுகளும் ஒரு பூவில் உள்ள இரு இதழ்கள் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு பிரிவு குருமார்கள் பெருமாள் பாதத்தில் இளைப்பாறும் நிலையில், சீடர்கள் குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!