×
 

ஜூலை 27-ல் தமிழ்நாடு தழுவிய போராட்டம்! விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும் எனத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைக் கண்டித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியில் மாணவர்கள் நடத்திய பேரணியின் மீது மத்திய மோடி அரசின் காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

 தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்துள்ளன. இதனால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். அதனை எதிர்த்துக் காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடிகளால் அடித்தும் காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

காயமடைந்த மாணவர்களைச் சந்தித்த போது, சீருடை அணியாத குண்டர்கள் தங்களைக் தாக்கியதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கைதான மாணவர்கள் குறித்த விவரங்களை டெல்லி காவல்துறை வெளியிடவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நீதி கேட்டுப் பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்களும் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்தச் சர்வாதிகார அணுகுமுறையால் ஜனநாயக மாண்புகள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ள தொல். திருமாவளவன் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இச்சம்பவத்திற்காகப் பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், மற்றும் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்து மாநில அரசுகளே தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 திங்களன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் ஜனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி கைதால் சென்னையில் போராட்டம் வெடித்தது! தங்கபாலு தலைமையில் காங். கட்சியினர் மறியல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share