லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள்!! எம்பிக்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!
அவையில் உரிமைக்காக குரல் கொடுங்கள், ஆனால் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் என்று ராஜ்ய சபா எம்பிக்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜ்யசபா உறுப்பினர்கள் அவையில் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
"அவையில் உரிமைகளுக்காக குரல் கொடுங்கள், ஆனால் அரசியல் சாசனம் மற்றும் விதி புத்தகம் எனும் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள்" என்று அவர் அறிவுறுத்தினார். டில்லி பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அரசியல் கட்சிகளின் ராஜ்யசபா குழுத் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டத்தின் முக்கியத்துவம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பின் முதல் முறையாக நடந்த இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் உட்பட 29 குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, குறுகிய காலத்தில் இந்தக் கூட்டம் நடந்ததற்கு ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர்ந்து 25 ஆண்டுகள்! குஜராத் முதல்வர் முதல் பிரதமர் வரை! அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த மோடி!
அவையின் நடவடிக்கைகளின்போது கண்ணியம், ஒழுக்கம், மரியாதையுடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். "அவையின் புனிதத்தன்மையை பராமரிக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். மக்களாட்சியை வலுப்படுத்த, அவை நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள்
கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ராஜ்யசபா குழுத் தலைவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், நீண்ட உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், சிறிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு உரையாற்ற கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மக்களாட்சிக்கு முக்கிய அறிவுரை
ராஜ்யசபாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவையில் கண்ணியமான விவாதங்கள் மூலம் மக்களாட்சியை வலுப்படுத்த முடியும் என்று துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்த அறிவுரை, எதிர்காலத்தில் அவை நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டுதலை பின்பற்றி, மக்களின் பிரச்சினைகளை திறம்பட விவாதிக்க முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: பீகார்ல எலெக்ஷன் எப்போது? இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிப்பு!