மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500இல் இருந்து ரூ.3,000ஆக உயர்வு! சொன்னதை செய்த மேற்குவங்க பாஜக அரசு!
லட்சுமிர் பந்தர் திட்டத்திற்கு மாற்றாக அன்னபூர்ணா பந்தர் என்ற பெயரில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜக அரசு பெண்களுக்கான பெரிய நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நேற்று தொடங்கப்பட்ட ‘அன்னபூர்ணா பந்தர்’ திட்டத்தின்கீழ் மாதம் ₹3,000 உதவித்தொகை வழங்கப்படும்.
முந்தைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ‘லட்சுமிர் பந்தர்’ திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ₹1,500 மற்றும் பழங்குடி பெண்களுக்கு ₹1,700 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக ₹3,000 உதவித்தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பழைய திட்டத்துக்கு பதிலாக புதிய ‘அன்னபூர்ணா பந்தர்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவுக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமை தாங்கினார். முதல் கட்டமாக 28.5 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் ₹3,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகுதியான அனைத்து பெண்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யார் இந்த சுவேந்து அதிகாரி!! மம்தாவின் முன்னாள் தளபதி!! பாஜக வெற்றிக்கு வித்திட்டது எப்படி?
இந்தத் திட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைப்பதால், குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்று பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முதல்வர் சுவேந்து அதிகாரி பேசுகையில், “பெண்களின் நலனே எங்கள் அரசின் முன்னுரிமை. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி வருகிறோம்” என்றார். புதிய திட்டம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், அவர்களின் பொருளாதார நிலை மேம்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்காள அரசு இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்து வருகிறது. வங்கிக் கணக்குகள் இல்லாத பெண்களுக்கு உடனடியாக கணக்கு தொடங்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டம் மாநிலத்தில் பாஜக அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!