நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!
நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ள 103 தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர் உத்தரவின்பேரில் 4 அமைச்சர்கள் டெல்லி புறப்பட்டுள்ளனர்.
இமயமலை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கோரக் காற்றாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களைத் துரிதமாக மீட்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகிய நான்கு பேர் அடங்கிய சிறப்புக் குழுவினர் அவசர அவசரமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி புறப்படும் முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், "நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இயற்கை பேரிடர் பாதிப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு வருகிறோம்; வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்குத் தேவையான அவசர முதலுதவி, உயர் மருத்துவ சிகிச்சை, உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் தங்குதடையின்றி வழங்குவதற்கான அனைத்து கிரவுண்ட் ஒர்க்குகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் கள நிலவரம் குறித்து மேலும் விளக்கமளித்த அவர், முதற்கட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 103 பேர் அங்கு சென்றிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது; இதில் 26 பேர் உடனடியாகப் பத்திரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பால் சிலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடித்தாலும், அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்ற களத் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் குழுக்களாகச் சென்றவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது; ஆனால் சிறு குழுக்களாகவோ, தனியாகவோ சென்ற சிலரைத் தொடர்புகொள்வதில் சிக்கல் நீடிக்கிறது, அவர்களது குடும்பத்தினரும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு விவரங்களை அளித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!
பேரிடர் தாக்கியுள்ள நேபாளப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட பாலங்களும், 40-க்கும் மேற்பட்ட முக்கிய இணைப்புச் சாலைகளும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்துள்ளதால், சாலை மார்க்கமாக மீட்புக் குழுவினர் செல்வதிலும், மீட்கப்பட்டவர்களை அழைத்து வருவதிலும் கடும் சவால்கள் நிலவுகின்றன. இதனால் சாலை மற்றும் ஆகாய மார்க்கம் (ஹெலிகாப்டர்) என இரு வழிகளிலும் மீட்புப் பணிகள் மிகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை அரசு உதவி மைய எண்களுக்கு 900-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும், அவற்றுக்கு உடனுக்குடன் பதில்களும் கள வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள நிலவரங்கள் குறித்து முதலமைச்சருக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. பேரிடரில் சிக்கியுள்ள தமிழக மக்களைச் சர்வதேச எல்லை வழியாக விரைவாக மீட்டு முதற்கட்டமாக டெல்லிக்கு அழைத்து வரவும், பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்குப் பத்திரமாக அழைத்து வரவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்ட பொதுமக்களின் துயரத்திலும் துன்பத்திலும் தமிழ்நாடு அரசு உறுதுணையாகப் பங்கெடுத்து நிற்கிறது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செப். 5-ல் டெல்லி இந்தியா கேட்டில் பேரணி! கரப்பான் ஜனதா கட்சி அறிவிப்பு!