அதிக தொழில்நுட்ப கோளாறு..!! டாப் 1ல் ஏர் இந்தியா நிறுவனம்..!! அதிர்ச்சி தகவல்..!!
அதிக தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ளும் விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் அண்மைக் காலமாக தொழில்நுட்பக் கோளாறுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த சமீபத்திய தரவுகளின்படி, பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட விமானங்களில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை (கிட்டத்தட்ட 50%) தொடர்ச்சியான அதே வகையான தொழில்நுட்பக் குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வில், ஆறு அட்டவணைப்படுத்தப்பட்ட விமான நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 754 விமானங்கள் ஆராயப்பட்டன. இதில் 377 விமானங்கள் (சுமார் 50%) ஒரே மாதிரியான கோளாறுகளை மீண்டும் மீண்டும் சந்தித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!
இந்தக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகும் சில நாட்களில் மீண்டும் தோன்றுவது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா குழுமம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இக்குழுமத்தின் 267 விமானங்களில் 191 விமானங்கள் (சுமார் 72%) தொடர்ச்சியான குறைபாடுகளுடன் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக, 166 ஏர் இந்தியா விமானங்களில் 137-உம், 101 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் 54-உம் இவ்வாறு பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவின் 405 விமானங்களில் 148-உம் தொடர்ச்சியான கோளாறுகளுடன் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 43 விமானங்களில் 16-உம், அகாசா ஏர் நிறுவனத்தின் 32 விமானங்களில் 14-உம், அலையன்ஸ் ஏரின் சில விமானங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எஞ்சின் சம்பந்தப்பட்ட கோளாறுகள், கேபின் அழுத்தம் குறைவு, அவசரகால உபகரணங்கள் சரியாக இயங்காதது போன்ற பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் எழுவதாக தெரியவந்துள்ளது. இவை பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இத்தகைய குறைபாடுள்ள விமானங்களை முழுமையாக சரிசெய்யவோ அல்லது இயக்கத்தை நிறுத்தவோ வலியுறுத்தியுள்ளது.
விமான ஊழியர்களின் பற்றாக்குறை, போதிய பராமரிப்பு இல்லாமை ஆகியவை இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தொடர்ச்சியான கோளாறுகள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
விமான நிறுவனங்கள் தங்கள் பராமரிப்பு முறைகளை மேம்படுத்தி, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு முதன்மையானது என்பதால், இத்தகைய குறைபாடுகளை உடனடியாகக் களைய வேண்டியது அவசியமாகிறது.
இதையும் படிங்க: நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!