மேற்கு ஆசியப் போர்: வணிக கேஸ் தட்டுப்பாடால் எகிறிய உணவு விலை..!! புலம்பி தள்ளும் ஓட்டல் ஓனர்கள்..!!
வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை ஓட்டல்களில் உணவு விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் தொடரும் போர் பதற்றம் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) ஏற்றுமதிகள் பெரிதும் தடைபடுவதால், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் கடுமையாக குறைந்துள்ளது.
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எல்பிஜி இறக்குமதியாளராக உள்ளது. அதன் தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவை. போர் காரணமாக ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் பாதையில் கப்பல் போக்குவரத்து தடைபடுவதால், வணிக எல்பிஜி சப்ளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், ஓட்டல்கள், உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மெனுவை குறைத்துள்ளன. பல வகையான சைட் டிஷ்கள், வறுத்த உணவுகள், பிரியாணி போன்றவை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. சில உணவகங்கள் காலை 6 மணிக்கு திறக்கும் வழக்கத்தை 7 மணிக்கு மாற்றியுள்ளன. விறகு அடுப்பு அல்லது மின்சார இண்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்த முயல்கின்றன. ஆனால், பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர உணவகங்களுக்கு இத்தகைய மாற்று வசதிகள் இல்லாததால், சிரமம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! மேல்மலையனூரில் பூஜை!! தேர்தலை சந்திக்க முழு மூச்சில் தயாராகும் விஜய்!
கள்ளச் சந்தையில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் (19 கிலோ) ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ விலை சுமார் ரூ.2,000-ஐ தாண்டாத நிலையில், இந்த பெரும் விலை உயர்வு உணவக உரிமையாளர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. விறகு அடுப்புக்கு இடமில்லாத பல உணவகங்கள் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்கி வருகின்றன.
இதன் விளைவாக, சென்னையில் பல உணவகங்கள் உணவு வகைகளின் விலையை சுமார் 20 சதவீதம் உயர்த்தியுள்ளன. ராயப்பேட்டை பகுதியில் ஒரு பிரபல உணவகத்தில், பில்-இல் தனியாக "20% விலை உயர்வு - சமையல் எரிவாயு மற்றும் பிற பொருட்களின் விலை உயர்வு காரணமாக" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, வணிக எல்பிஜி விநியோகம் சீராகும் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நெருக்கடி உணவகத் துறையை மட்டுமின்றி, பொதுமக்களின் அன்றாட உணவு செலவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து, விரைவில் சப்ளையை சீராக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில், இது மேலும் பரவலான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு ஞானபீட விருதா? போர்க்கொடி தூக்கும் தமிழ் எழுத்தாளர்கள்!! கண்டன அறிக்கை!