×
 

காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் எந்த எதிர்க்கட்சிகளும் ஏறி சவாரி செய்ய விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை என்று பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் ஆட்சி இழப்புக்குப் பிறகு கட்சியின் உள்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.

எம்.பி.க்களிடையேயும் கடும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. சில எம்.பி.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சி பெரும் பிளவை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது தேசிய அளவில் எதிர்க்கட்சி அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழி வகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதேபோன்ற சூழல் மகாராஷ்டிராவிலும் நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு இன்னும் அடங்கவில்லை. அஜித் பவார் தலைமையில் ஒரு பிரிவு கட்சியை கைப்பற்றிய நிலையில், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) என்ற புதிய அணியை உருவாக்கி நடத்தி வருகிறார். அஜித் பவார் மறைவுக்குப் பின்னர் இரு பிரிவுகளும் இணையும் என தகவல்கள் வெளியானபோதிலும், அவரது மனைவி துணை முதலமைச்சர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: தவெக ஆட்சி அமைந்த பின் டெல்லியில் முதல் சந்திப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர் விஜய்!

இந்நிலையில், சிவசேனா (யுடிபி) தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். டிஎம்சி, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) உள்ளிட்ட கட்சிகளை காங்கிரஸுடன் இணைத்து, பாஜகவுக்கு எதிரான வலுவான மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சரத் பவார் இதற்கு தலைமை தாங்கி, சிறிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். இந்த ஒற்றுமை முயற்சி எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பாஜக தரப்பு இத்தகைய முயற்சிகளை நிராகரிக்கிறது. மகாராஷ்டிரா முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ், “காங்கிரஸ் என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதில் யாரும் ஏற மாட்டார்கள். சிலர் ஏறினாலும் பாஜகவுக்கு இழப்பில்லை. மாறாக, அது பாஜகவுக்கு கூடுதல் அரசியல் வாய்ப்புகளை உருவாக்கும்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள உள்மோதல்கள் மற்றும் பிளவுகள், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்கால ஒற்றுமை முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது இப்போது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
 

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு: மீனாட்சி நடராஜன் மனு நிராகரிப்புக்கு எதிராகக் காங்கிரஸ் அதிரடி சட்டப் போராட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share