×
 

வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்!! கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா? திமுக - காங்., போஸ்டர் யுத்தம்!

தி.மு.க.வை வம்பிழுக்கும் வகையில் மறைமுகமாக விமர்சித்து, காங்கிரஸ் தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவிடம் ‘ஆட்சியில் பங்கு’ கோரி தொடர்ந்து அறிக்கைகள், பேட்டிகள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சமீபத்தில் சென்னை வந்து கடும் எச்சரிக்கை விடுத்தார். “ஆட்சி பங்கு கோருவது கட்சியின் நிலைப்பாடு அல்ல. தனிநபர் கருத்துகள் மட்டுமே. கூட்டணி விவகாரத்தில் பொதுவெளியில் பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்தார். இதன்பிறகு மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பேச்சு சற்று அடங்கியது.

ஆனால் இப்போது மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை கூத்தியார் குண்டு சக்கரவர்த்தி அம்பலம் என்பவர், நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் பெரிய எழுத்துகளில் ‘வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்... இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு! காங்கிரசுக்கு அவசியம்! திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் பிரவீன் சக்ரவர்த்தி!

இந்த ‘கொள்ளைக்காரன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது என்பது குறித்து திமுகவினரிடையே கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. திமுகவினர் இதை மறைமுகமாக திமுக தலைமையையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் குறிவைத்த விமர்சனமாக பார்க்கின்றனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவற்றை ஒரு தரப்பினர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால் மதுரை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக வட்டாரங்கள் இதை கண்டித்து வருகின்றன. “கூட்டணி கட்சி என்ற முறையில் இப்படி மறைமுக தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. காங்கிரஸ் தலைமை இதை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு, ஆட்சி பங்கு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்த போஸ்டர் சர்ச்சை கூட்டணி உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் தற்போது போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். 

இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share