சகோதரர் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்... திமுகவுக்கு ஷாக் கொடுத்த துரை வைகோ...!
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது - விஜய் பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளார் - கோவையில் எம்.பி. துரை வைகோ பேட்டி
கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் என மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தாத். அப்போது பேசிய அவர், சென்னை மின்வாரிய அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான 10 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், மின்துறை அமைச்சரும், அதிகாரிகளும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதனால் களவாடப்பட்டது என்பதை காவல்துறை கண்டறிய வேண்டும்.
தமிழகத்தில் விவசாயக் கடன் தள்ளுபடியை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தப்படும் நிலையில், தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டே சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது முழுமையாக நிறைவேற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்போது, தேர்தல் வாக்குறுதிகளில் எதையெல்லாம் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பது மக்களுக்குத் தெளிவாகும்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!
புதிய ஆட்சிப் பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தக் கால அவகாசம் தேவை என முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. குற்றச் சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக கைது நடவடிக்கைகளும், எப்.ஐ.ஆர் (FIR) பதிவும் தொய்வின்றி நடைபெறுகின்றன.
தவெக தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், பிரதான எதிர்க்கட்சியான திமுகவை அவர்கள் விமர்சிப்பது இயல்பான அரசியல் நகர்வே. புதிய அரசுக்கும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுக்கும் ஒரு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலாவது கால அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் குற்றம் சாட்டுவது சரியல்ல.
உதயசூரியனில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கிறது. தற்போதைக்கு கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், கடந்த தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிடாமல் வேறு சின்னத்தில் நிற்பது அதன் அடிப்படை அடையாளத்தையும் தனித்துவத்தையும் இழக்கச் செய்யும்.
சட்டப்படி பார்த்தால், எங்கள் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தே போட்டியிட்டுள்ளனர். எனவே அவர்கள் தற்போது திமுக உறுப்பினர்களே ஆவர். இது ஜனநாயகத்திற்கு ஒரு இழுக்கு. எதிர்காலத்தில் மதிமுக தனது சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையாகும்.
ஐயா மூப்பனார், தலைவர் வைகோ, விஜயகாந்த் ஆகியோரால் முழுமையாகக் கொண்டுவர முடியாத ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை, ஜாதி, மத மற்றும் பண அரசியலைக் கடந்து சகோதரர் விஜய் தற்போது கொண்டு வந்துள்ளார். அவர் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக எங்கள் இயக்கத்தின் சில தோழர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் த.வெ.க-வில் இணைவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். வாரிசு அரசியல், ஜாதி, மத அரசியலை ஒழிப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல, புதிய கட்சி தொடங்கியுள்ள அன்புச் சகோதரர் அண்ணாமலைக்கும் எனது பிறந்தநாள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் தற்போதைய தலைமுறையினரின் (Gen Z) வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "சங்கத் தமிழை விட, மக்களுக்குப் புரியும் எளிய மொழியே முக்கியம். சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆகியும் பல கிராமங்களில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை, சாலை வசதி இல்லை, மரத்தடியில் பள்ளிகள் இயங்குகின்றன. தரமான கல்வி, தனியார் மருத்துவமனைக்கு இணையான அரசு மருத்துவம், உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு முழுமையாக நிறைவேற்றிய பிறகே, மொழியின் தூய்மையைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும், என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் விஜய்க்கு 3வது இடம்! முதலிடம் யார் தெரியுமா? சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?