பாலியல் வழக்கில் கைது எப்போ? ட்ரம்பை மீண்டும் சீண்டும் எலான் மஸ்க்.. புதுக்கட்சி துவங்கியதும் பற்ற வைத்த வெடிகுண்டு!
அமெரிக்க சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் அதிபர் ட்ரம்பின் பெயர் உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அமெரிக்க தொழில் அதிபரான மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் என பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2024ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நிதி உதவியும், பிரசாரமும் செய்து உதவினார்.
டிரம்ப் அதிபர் ஆனவுடன், அவரது நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு, அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency - DOGE) தலைவர் பதவி கொடுத்தார். சுமூகமாக சென்ற இருவரது உறவு, டிரம்ப் கொண்டு வந்த ஒரு சட்ட மசோதாவால் சிக்கலை சந்தித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொண்டனர்.
புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த மஸ்க், மக்கள் ஆதரவையும் கோரினார். அமெரிக்கர்கள் பலர் அவரது புதிய கட்சி ஆசைக்கு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சி அடைந்த எலான் மஸ்க் இன்று, “அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறியது: நடுத்தர மக்களில் 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கர்கள் உண்மையான அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய மஸ்க்! புலம்பித் தவிக்கும் ட்ரம்ப்.. மூன்றாவது கட்சி சறுக்குமா? சாதிக்குமா?
வீண் செலவு மற்றும் ஊழலால் நாடு திவாலாகிறது. இந்த சூழலில் நாம் ஜனநாயகத்தில் வாழவில்லை. மாறாக ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். இன்று அமெரிக்கா கட்சி, உங்களுடைய சுதந்திரத்தை உங்களுக்கே திருப்பித் தருவதற்காக தொடங்கப்பட்டு இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதனிடையே அமெரிக்காவில் 3வது கட்சி குழப்பத்தையே அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் இரு கட்சி முறை தான் இருந்து வருகிறது. 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை அதிகரிக்கும். மூன்றாவது கட்சியைத் தொடங்குவது அபத்தமானது. குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம். ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டனர்.
ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. மூன்றாம் கட்சிகள் ஒருபோதும் வேலை செய்யவில்லை. கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவில் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்ற உண்மை.
இருந்தபோதிலும், அவர் ஒரு மூன்றாவது அரசியல் கட்சியைத் தொடங்க விரும்புகிறார். நம்பிக்கையையும், மனதையும் இழந்த தீவிர இடது ஜனநாயகக் கட்சியினருடன் நமக்கு அது போதுமானது. மறுபுறம், குடியரசுக் கட்சியினர் ஒரு சீராக இயங்கும் இயந்திரம், அவர்கள் நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மசோதாவை நிறைவேற்றினர் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் சீண்டியுள்ளார் எலான் மஸ்க். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் அதிபர் ட்ரம்பின் பெயர் உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். அதிபராக இருப்பதால் ட்ரம்ப் பெயர் அந்த ஆவணங்களில் இருந்து வெளியாகாமல் உள்ளது என்றும் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று எக்ஸ் பதிவில் மஸ்க் கூறும்போது, “இப்போது என்ன நேரம். அங்கு பாருங்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நேரம் மீண்டும் 12 மணியாகிவிட்டது. கைது விவகாரம்’’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள படத்தில் அதிகாரப்பூர்வ ஜெப்ரி எப்ஸ்டீன் கைது நேரம்: 0 0 0 0 என்று கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த பதிவு அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு உறுதி! முற்றும் மோதல்.. தனிக்கட்சி துவக்கினார் எலான் மஸ்க்..