×
 

"டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

திருப்பூரில் 6 பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

திருப்பூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதச் சதித்திட்ட கும்பலை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்றைய 'ஸ்டாலின் மாடல்' அரசு பயங்கரவாதத்தைக் கையாளத் தெரியாமல் திணறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தற்போது தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்குத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை இன்றைய விடியா திமுக அரசு சீர்குலைத்து வைத்திருக்கிறது. திருப்பூரில் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அதனைத் தீவிரவாத அச்சுறுத்தல் என்று ஒப்புக்கொள்ளாமல், வெறும் "சிலிண்டர் வெடிப்பு" எனச் சமாளிக்கவே திமுக அரசு முயன்றது. அப்போதே விழிப்புடன் இருந்திருந்தால் இன்று நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது என அவர் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

"டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை இங்குள்ள திமுக அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS - Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டிருந்தது? மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளே தொடர்ந்து பயங்கரவாதிகளைக் கைது செய்து வரும் நிலையில், மாநில அரசு இதனைத் தடுக்கத் தவறியது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் ஆட்சியைத் தொடர விட்டால், 1998-ல் கோவையில் நடந்ததைப் போன்ற ஒரு கோரச் சம்பவத்திற்கு மீண்டும் வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

"தமிழகத்தின் அமைதி நிலை திரும்ப, இந்த மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, #மக்களைக்_காப்போம் மற்றும் #தமிழகத்தை_மீட்போம் ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தேர்தலுக்குச் சில காலமே உள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த இத்தகைய அரசியல் மோதல் தமிழகத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


 

இதையும் படிங்க: ஹை அலர்ட்..!! டெல்லிக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை...! தீவிர சோதனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share