×
 

கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும்,  மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 தொடங்கிய நிலையில், ஜூன் 14 வரை அமலில் இருக்க உள்ளது. இந்த காலக்கட்டம் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அழிந்துவிடும் என்று கருதி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் வேலையில்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு 61 நாட்களுக்கு நிவாரணமாக ரூ.8 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், மீன்பிடி தடைக்காலத்தில் அரசு விசைப்படகுகளுக்கு (இழுவலை) தடைவிதித்து நடைமுறையில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: வீழ்ச்சி அடைந்த மாம்பழ விலை... துயர் துடைக்காத தமிழக அரசை கண்டித்த அன்புமணி!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் வளம் தற்போது இல்லை, அன்று இருந்த படகுகள் எண்ணிக்கையும் இன்று இல்லை. தடை காலம் முடிந்து தொழிலுக்கு படகுகளை எடுத்தால் ஒரு வார காலம் மட்டும் மீன் அதிகம் கிடைக்கும். பிறகு தொழில் நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. தற்போது டீசல் விலை உயர்வால் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் நிலை அறிந்து மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும். தற்போது மீனவர்கள் டீசல் விலை ஏற்றத்தால் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். தடைகாலம் கோடைக்காலத்தில் வருவதால் படகுகள் காய்ந்து அதிகளவில் சேதமடைகிறது.

படகுகளை பராமரித்து மீண்டும் தொழிலுக்கு எடுக்கும்போது படகு ஒன்றிற்கு சர்வசாதாரணமாக 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்து படகை தொழிலுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீனவர்களின் நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை அரசு கடன் வசதியுடன் குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தித் தந்தால் மீன்களுக்கு நல்ல விலைகிடைத்து நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share