தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட விகிதங்கள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டர் கோரலில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், அதில் மிகக் குறைந்த தொகையாக இதர செலவுகளுக்கு 1 பைசா மட்டுமே கோரிய ஜாய் ஆலுக்காஸ் மற்றும் அதற்கு இசைவு தெரிவித்த கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதாச்சார அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணி ஆணை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் களத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொசு ஒழிப்புப் பணிகள், மருந்து கையிருப்பு மற்றும் தீவிரக் காய்ச்சல் முகாம்கள் அமைப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை வழங்கிய பின்னர், அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: ரூ.755 கோடி டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் வசமா? ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் எதிர்பார்ப்பு..!!
அப்போது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டர் முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விவாதங்களுக்கு விளக்கமளித்த அவர், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் அசல் சந்தை விலை, மற்றும் அதன் செய்கூலி, சேதாரம், சிப்பமிடுதல் (பேக்கேஜிங்) என இரு வேறு பகுதிகள் உள்ளன.
தங்கத்தின் விலை என்பது கொள்முதல் செய்யப்படும் அன்றைய சந்தை நிலவரத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுத் தமிழ்நாடு அரசால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும்; அதேநேரம் அரசின் அதிகாரப்பூர்வ டெண்டர் என்பது செய்கூலி, சேதாரம் மற்றும் பேக்கேஜிங் போன்ற இதர செலவுகளுக்காக மட்டுமே கோரப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இத்திட்டத்தின் டெண்டர் கோரலில் மொத்தம் 11 முன்னணி நகை விற்பனை நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில் முதல் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ், இதர செலவுகளுக்கான தொகையை வெறும் 1 பைசா என மிகக் குறைந்த விலைப் புள்ளியாகக் கோரியது.
இந்த குறைந்தபட்ச விலைப் புள்ளிக்கு ஒப்புதல் அளிக்க விருப்பமா என இதர பங்கேற்பாளர்களிடம் கேட்டபோது, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் அதே 1 பைசா தொகைக்குத் தனது முழு இசைவைத் தெரிவித்தது. இதன் காரணமாக அரசு விதிகளின்படி 70:30 என்ற விகிதத்தில் இந்த இரு பெருநிறுவனங்களுக்கும் பணி ஆணை வெளிப்படையாக வழங்கப்பட்டுத் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!