திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
யாரும் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்ததில்லை என்ற விதியை மாற்றுவேன் என டெல்டா மண்ணில் மு.க.ஸ்டாலின் சவால்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுகவின் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைக்கப் போவதாகத் தனது ஆதரவாளர்களுக்கு உறுதி அளித்தார். திமுகவில் இதுவரை யாரும் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக இருந்ததில்லை என்ற பிம்பத்தை இந்த முறை மக்கள் துணையுடன் உடைப்பேன் என அவர் ஆவேசமாகப் பேசினார்.
திமுகவின் கடந்த காலத் தேர்தல்களைச் சுட்டிக்காட்டிய முதல்வர் திமுக ஆட்சியில் ஒருமுறை முதலமைச்சரானால், அடுத்த முறை எதிர்க்கட்சி வரிசைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் இதுவரை நடந்துள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் செய்துள்ள சாதனைகளும், திராவிட மாடல் ஆட்சியும் அந்த வரலாற்றை மாற்றப்போகிறது. தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராகப் பதவியேற்று, திமுகவின் புதிய சரித்திரத்தை நான் படைப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது எனத் தஞ்சை மக்களிடம் உறுதி கூறினார்.
தஞ்சாவூர் உடனான தனது உணர்வுப்பூர்வமான பிணைப்பை வெளிப்படுத்திய அவர் நான் எப்போதும் சொல்வது போல, நானும் ஒரு டெல்டாகாரன் தான். இந்தப் பகுதி மக்களின் விவசாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எனது அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த உரிமையுடன் உங்களிடம் மீண்டும் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!
அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஸ்டாலின் பழனிசாமி அவர்களும் மற்றவர்களும் என்ன பேசினாலும், மக்களின் வீடுகளில் நம் திட்டங்கள் பேசுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் காலை உணவுத் திட்டம் வரை நாம் செய்த மாற்றங்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எத்தனை பொய்யானப் பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழக மக்கள் உண்மையான வளர்ச்சியை அடையாளம் காண்பார்கள். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் 'உதயசூரியன்' சின்னம் மீண்டும் தமிழகத்தை ஆளும் என்பதைத் தஞ்சாவூர் மண்ணில் இருந்து உரக்கச் சொல்கிறேன் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த 'வரலாற்று உடைப்பு' சவால், திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!