×
 

"3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் பிரம்மாண்ட 3 நாள் இறுதிச் சடங்கு திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய அதிர்ச்சி வான்வழித் தாக்குதலில், ஈரானின் 37 ஆண்டுகால அசைக்க முடியாத உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி கமேனி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தையும், மத்திய கிழக்கில் போர்ப் புயலையும் கிளப்பியது. போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அவரது இறுதிச் சடங்கு விபரங்களை, ஈரானின் டெஹ்ரான் துணை மேயர் முகமது அமின் தவகோலிசாதே தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் மற்றும் விடைபெறல் நிகழ்வுகள் ஈரானின் முக்கிய 3 நகரங்களான டெஹ்ரான் (Tehran), ஹோம் (Qom) மற்றும் மஷாத் (Mashhad) ஆகிய இடங்களில் மூன்று நாட்கள் அரசு முறைப்படி பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளன. இதில் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறும்.

டெஹ்ரானில் 2 கோடி மக்கள் திரள அதிரடி ஏற்பாடு: இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி ஊர்வலத்தில், தலைநகர் டெஹ்ரானில் மட்டுமே சுமார் 2 கோடி மக்கள் (20 Million) அஞ்சலி செலுத்தத் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ஒரு விடைபெறல் நிகழ்வாக இருக்கும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரானுடன் ஒப்பந்தம் வேண்டுமெனில் இஸ்ரேலை அங்கீகரியுங்கள்! சவுதி, பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் நிபந்தனை!

கமேனியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஈரான் மக்கள் மட்டுமின்றி, அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் சர்வதேச ராஜதந்திரிகள் ஈரானில் குவியத் தொடங்கியுள்ளனர்.

மூன்று நாட்களாக நடைபெறும் பல்வேறு அஞ்சலி மற்றும் அலாதி சடங்குகளுக்குப் பிறகு, அலி கமேனியின் இறுதி விருப்பத்திற்கு இணங்க, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான இமாம் ரெசா (Imam Reza) தர்கா வளாகத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதைகளுடன் பக்காவாக அடக்கம் செய்யப்படவுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள ஈரான் உச்ச தலைவரின் இந்த மெகா இறுதிச் சடங்கு, வரும் இஸ்லாமியக் காலண்டரின்படி முகர்ரம் மாதத்தின் தொடக்கத்தில் (ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில்) மிகத் தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நடைபெற உள்ளதாகத் தற்பொழுது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share