கட்சிக்கு ஆள்பிடிக்கும் நிலையில் தவெக இல்லை..!! ஒரே போடாக போட்ட அமைச்சர் செங்கோட்டையன்..!!
முதலீடுகள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் தடுக்க திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், திமுக-அதிமுக உறவு, தமிழக வெற்றி கழகம் (தவெக) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.
அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு கட்சியிலிருந்து வந்த ஒருவருக்காக மிகப் பெரிய விழாவை நடத்தி, அது ஒரு மிகப்பெரிய சாதனை போல சித்தரிக்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார். “எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை. மக்கள் தாங்களாகவே தமிழக வெற்றி கழகத் தலைவரை நாடி வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களிலிருந்து மக்கள் வருவது இயல்பான ஒன்று,” என்றார்.
திமுக ஆட்சியிலேயே அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் கட்சியில் இணைந்ததை சுட்டிக்காட்டிய அவர், தவெக-வுக்கு ஆதரவாக மக்கள் வருவதை இயல்பான அரசியல் நிகழ்வாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் வருவதற்கு முன்பே பெரும்பான்மை பலம் இருக்கும் போது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற சதித்திட்டம் தீட்டியவர் யார் என மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை ஏற்பாடுகள்.. அனைத்திற்கும் தயார்..!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!
“தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை. அதிமுகவுடன் திமுக இணைந்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்தது. இந்தப் பெருமை முதல்வர் விஜய் அவர்களுக்கு உரியது,” என்று அமைச்சர் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். டெல்லியில் முதல்வர் பிரதமரைச் சந்தித்த விவகாரம் குறித்தும் அவர் பேசினார். “மு.க. ஸ்டாலினுக்கு எப்படித் தெரியும்? நம் முதல்வர் தமிழ்நாட்டின் தேவைகளை வலியுறுத்தி அவற்றைப் பெற்று வந்துள்ளார்,” என்றார்.
மின்சாரத் துறையில் சுமார் 5000 மெகாவாட் சோலார் எர்ஜி திட்டத்திற்கான மத்திய அரசின் மானியத்தை திமுக அரசால் பெற முடியவில்லை என்று சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மிதுன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிச்சாமி முன்வைப்பது சிறிய குற்றச்சாட்டுதான். முதலில் திமுகவுடன் இணைந்து ஆட்சி பிடிக்க சதி திட்டமிட்டவர் யார் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்,” என்றார்.
முதலீடுகள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் தடுக்க திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சூழலை உருவாக்க அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கான சிறப்பு வாய்ப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வருவாய்த் துறை சார்பில் பல மாற்றங்கள் வரவிருப்பதாக அமைச்சர் அறிவித்தார். “தேவையான பணிகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அடுத்த மூன்று மாதங்களில் வருவாய்த் துறையில் பல மாற்றங்களைப் பார்க்கப் போகிறீர்கள். முதல்வர் ஒவ்வொரு துறைக்கும் வழிகாட்டுதல் அளித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு துறையும் சாதனை படைக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை நயினார் நாகேந்திரனிடமே கேட்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது இயக்கத்தை 11 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்,” என்று கடுமையாக விமர்சித்தார். தீர்ந்து போன கட்சிகளிலிருந்து நபர்களை தவெக இணைப்பதாக ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, “தீர்ந்து போன கட்சி எது? எந்தக் கட்சி தீர்ந்து போய்விட்டது என்று அவர் சொல்கிறார்? ஸ்டாலின் மக்களால் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர்,” என்றார். மேலும், இப்படிப்பட்ட கருத்துகளை விடுத்து அமைதியாக இருந்து தன் கட்சியை வலுப்படுத்தி மக்களின் செல்வாக்கைப் பெற முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.
“ஒரு இயக்கத்தின் தலைமை சுக்குநூறாக்கப்பட்டுள்ளது. இளைய சமுதாயம் தமிழக வெற்றி கழகத் தலைவரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தொகுதியில் நமது சின்னம் இருந்திருந்தால் அவரது நிலையும் இதுதான்,” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.இந்தப் பேட்டி தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக-வின் உயர்வு, திமுக-அதிமுக இடையிலான உறவு, முதலீட்டு ஈர்ப்பு, மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் இந்தப் பேட்டியில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
வருவாய்த் துறையில் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள், காலிப்பணியிடங்கள் நிரப்பல், தொழில் நட்பு சூழல் உருவாக்கம் ஆகியவை அரசின் நடைமுறை நடவடிக்கைகளாக மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இந்தப் பேட்டி தமிழக அரசியலில் தொடர்ந்து நிலவும் கூட்டணி அரசியல் மற்றும் எதிர்காலத் தேர்தல் உத்திகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தும் என்பது உறுதி.
இதையும் படிங்க: "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !