×
 

“மதம் வேறு... மனம் ஒன்று”..! இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு..!!

சிவகங்கையில் இஸ்லாமியர்கள் பாத்தியா ஓத இந்துக்கள் பூ குழி இறங்கி வழிபாடும் மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு இசுலாமியர்கள் பாத்தியா ஓத, இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு மேற்கொண்டனர். ஆண்கள் நெருப்பை அள்ளி வீச, பெண்கள் தங்களது முந்தானையில் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடைபெற்றது. இந்துக்களின் கலாச்சாரமும், இஸ்லாமியா்களின் கலாச்சாரம் இணைந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தோடு கொண்டாடப்பட்டு வரும் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வஞ்சினிபட்டி கிராமத்தில் இந்து முஸ்லீம் மதத்தினர் இணைந்து மொகரம் பண்டிகையை கொண்டாடினர். இந்துக்கள் அல்லாசாமி பூக்குழித் திருவிழா என்ற பெயரில் இஸ்லாமியர்களுடன் இணைந்து கொண்டாடி வரும் இந்த விநோத திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த விழா, 17 ம் நூற்றாண்டில் இருந்து சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் இக்கிராமம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள் விருந்தினர்களுக்கு கறி விருந்து வைத்தும், இஸ்லாமியர்கள் சைவ உணவு உண்டும் விரதம் இருந்து விழாவை கொண்டாடினர்.

மொகரம் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களால் பாத்தியா ஒதப்பட்டது. உள்ளூா் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான இந்துக்களும் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து இரு கைகளை குவித்து அல்லாவை வணங்கினா். பின்பு கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, பூக்குழியை, 3 முறை சுற்றி பக்தா்கள் பூக்குழிக்குள் இறங்கினர். அப்போது சுற்றி இருந்த ஆண்கள், பக்தர்கள் இறங்கிய பூக்குழிக்களில் இருந்து மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை பெண்கள் முந்தானையில் வாங்கிச் நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: ஹஜ் புனிதப் பயணம் 2027: ஜூலை 20 வரை கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

குழந்தை வரம், திருமணம் வேண்டியும் பெண்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அப்போது கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வழிபாடு செய்தனர். பூக்குழியில் உள்ள சாம்பலை பிரசாதமாக அள்ளி, இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பூசி விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறை சாற்றும் ஓர் முக்கிய விழாவாக பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share