நண்பன் கூப்பிட்டதால போறேன்! மலேசியா புறப்பட்டார் மோடி! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 விஷயங்கள்!!
எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 7, 2026) காலை 2 நாள் அரசு முறை பயணமாக மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், மோடியின் மூன்றாவது மலேசியா வருகையாகும்.
வர்த்தகம், ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இன்று மாலை கோலாலம்பூரில் மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மலேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மோடி, "எனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு செல்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பல துறைகளில் வலுவாக உள்ளது. இந்தப் பயணம் ஆழமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
பயணத்தின் மிகப்பெரிய ஹைலைட், இந்திய வம்சாவளி கலைஞர்கள் நடத்தும் சாதனை நடன நிகழ்ச்சியாகும். 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடி, மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பிடிக்க முயல்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி மோடிக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்வின் போது நடைபெறுகிறது. பாரதநாட்டியம், கதக், ஒடிசி உள்ளிட்ட இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடனங்களை இணைத்து ஒரே கோரியோகிராஃபியில் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி, வெளிநாட்டில் இந்திய கலாச்சாரத்தை பிரகாசமாக வெளிப்படுத்தும்.
ராணுவ ஒத்துழைப்பு பயணத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டோர்னியர் விமானங்கள் விற்பனை, ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சுகோய்-30 போர் விமானங்களின் பராமரிப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும். இந்திய வெளியுறவு அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் உற்சாகம் மிகுந்துள்ளது. இந்தப் பயணம் இந்தியா-மலேசியா உறவுகளை பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ரீதியாக மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 800 கலைஞர்கள் சாதனை நடனம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!