கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!
கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கியது ஜி 7 கூட்டமைப்பு. உலகில் பலம் வாய்ந்த அமைப்பாக ஜி 7 கூட்டமைப்பு திகழ்கிறது. ஆண்டுதோறும் இதன் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு கனடாவில் ஜி7 மாநாடு நடைபெறுகிறது.
ஜூன் 15 முதல் 17 வரை 3 நாட்கள் இந்த மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற உள்ளது. கனடாவுக்கும், இந்தியாவுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மோதலை மறப்போம். ஜி 7 உச்சி மாநாட்டுக்கு வாங்க என்று கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!
இன்று தான் கனடா பிரதமர் மார்க் கார்னி போன் செய்துள்ளதால் பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்பாரா? அல்லது இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார்.
கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து கூறினேன். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள். இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!