தேநீர் விற்றவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது இந்திய ஜனநாயகம்! பிரதமர் மோடி உருக்கம்!
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது என் வாழ்வின் பெரும் பாக்கியமாகும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாரீஸ்: இந்திய வம்சாவளியினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து 12 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்தது என் வாழ்வின் பெரும் பாக்கியம்” என உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “பாரீஸ் வண்ணங்களின் நகரம். இங்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கூடியிருப்பது இந்த நகருக்கு புதிய அழகைச் சேர்க்கிறது. தமிழர்கள், பஞ்சாபியர்கள், குஜராத்திகள், மகாராஷ்டிரர்கள், மேற்கு வங்காளிகள் என இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “14ஆம் தேதி நீஸ் நகரில் பாரத் இன்னோவேஷன் மாநாட்டில் பங்கேற்றேன். இன்று பாரீஸில் உங்களைச் சந்திப்பது பாரதத்தை இணைக்கும் மாநாட்டில் கலந்துகொள்வது போல் உணர்கிறேன். நீங்கள் 21ஆம் நூற்றாண்டு இந்தியா-பிரான்ஸ் உறவை பிரதிபலிக்கிறீர்கள்” என நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!
இந்திய ஜனநாயகத்தின் வலிமையைப் பற்றி பேசிய பிரதமர், “தேநீர் விற்பவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்தது இந்திய ஜனநாயகத்தின் பெருமை” என்று குறிப்பிட்டார்.
3
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள மாற்றங்களை விவரித்த மோடி, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை இரட்டிப்பாகியுள்ளன. ஏற்றுமதி 35 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 100 மடங்கு உயர்ந்து, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளது” என்றார்.
சமூக மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். “கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்துள்ளன” என்பதை அவர் எடுத்துரைத்தார்.
140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளைத் தன்னுடன் கொண்டு வந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் அபாரமான ஆற்றலுக்கு கடந்த 12 ஆண்டுகள் சாட்சியாக அமைந்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இந்திய வம்சாவளியினரின் உற்சாகமான வரவேற்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியா-பிரான்ஸ் உறவு இன்னும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!