முடிவுக்கு வரும் 50 ஆண்டு பாரம்பரிய சவுத் பிளாக்..!! குட்பை சொல்லும் பிரதமர் மோடி..!! நாளை முதல் புதிய அலுவலகத்தில்..!!
கடந்த 50 ஆண்டுகளாக பிரதமரின் அலுவலகமாக டெல்லியில் செயல்பட்டு வந்த சவுத் பிளாக்கை விட்டு பிரதமர் மோடி நாளை புதிய அலுவலகம் செல்கிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஆட்சி மையமாக விளங்கிய ரெய்சினா ஹில்லில் அமைந்த சவுத் பிளாக் கட்டிடத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் (PMO) இனி புதிய, நவீன வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளது. இந்த புதிய கட்டிட வளாகத்துக்கு ‘சேவா தீர்த்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 13) இதை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து, தனது அலுவல் பணிகளை அங்கிருந்து தொடங்க உள்ளார்.
சவுத் பிளாக் கட்டிடம் 1931ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இங்கேயே நடைபெற்றது. 1947இல் பிரதமர் செயலகமாகவும், 1964இல் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் விரிவாக்கப்பட்டும், இந்திரா காந்தி ஆட்சியில் மேலும் விரிவுபடுத்தப்பட்டும், 1977இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது ‘பிரதமர் அலுவலகம்’ என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது.
கடந்த 78 ஆண்டுகளாக (சுதந்திரத்துக்குப் பிறகு) இந்தியாவின் மிக முக்கிய முடிவுகள், தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கைகள் உள்ளிட்டவை இங்கிருந்தே எடுக்கப்பட்டன. இதே ரெய்சினா ஹில் பகுதியில் உள்ள நார்த்த் பிளாக் கட்டிடத்தில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வரி மற்றும் சுங்கத் துறைகள் செயல்பட்டு வந்தன. இவ்விரு கட்டிடங்களும் (நார்த் & சவுத் பிளாக்) நாட்டின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மையப் பங்கு வகித்தன. ஆனால், இப்போது இவை படிப்படியாக காலி செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!
நார்த் பிளாக் ஏற்கனவே கர்த்தவ்ய பாதை அருகே உள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் போன்றவையும் அடுத்த சில வாரங்களில் புதிய இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன. இதனால், ரெய்சினா ஹில்லின் இந்த வரலாற்று சின்னங்கள் இனி வெறிச்சோடும் நிலைக்கு வருகின்றன.
பின்னர் இவை ‘யுக யுகின் பாரத் சங்கராலயா’ என்ற தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன. புதிய ‘சேவா தீர்த்’ வளாகம் சவுத் பிளாக்கிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில், கர்த்தவ்ய பாதை அருகே அமைந்துள்ளது. இது மத்திய விஸ்டா மறுபயன்பாட்டுத் திட்டத்தின் (Central Vista Redevelopment Project) ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பிரதமர் அலுவலகம் (சேவா தீர்த்-1), அமைச்சரவை செயலகம் (சேவா தீர்த்-2), தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் (சேவா தீர்த்-3), மேலும் உயர்மட்ட விருந்தினர்களை வரவேற்கும் ‘இந்தியா ஹவுஸ்’ ஆகியவை அமைந்துள்ளன.
நாளை மதியம் 1:30 மணியளவில் பிரதமர் மோடி ‘சேவா தீர்த்’ என்ற பெயரை அறிவித்து திறந்து வைக்க உள்ளார். பின்னர் மாலை 6 மணியளவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 12) மாலை 4 மணிக்கு சவுத் பிளாக்கில் கடைசி அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் தலைமையில் நடத்த உள்ளார். அதன் பிறகு, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் புதிய வளாகத்துக்கு சென்று பணியைத் தொடங்குவர்.
இந்த மாற்றம் இந்தியாவின் நிர்வாக அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நவீன வசதிகள், சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்பு (4-நட்சத்திர GRIHA தரநிலை), டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுடன் கூடிய இந்த வளாகம், குடிமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் ‘சேவா தீர்த்’ (சேவைக்கான புனித இடம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாட்டின் வளர்ச்சி, நிர்வாக திறன் மேம்பாடு ஆகியவற்றின் அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!