×
 

கையில் பேப்பருடன் களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்... சி.எம். விஜய்க்கு கொடுத்த பெரும் ஷாக்...!

பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், "2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும்போது தமிழ்நாட்டின் தொகுதிகள் வெகுவாக குறையும்" என முதலமைச்சர் விஜய் பேசினார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையான 543-ஐ மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: மத்திய அரசு இதுவரை தொகுதி மறுவரையறை தொடர்பான இந்த மசோதாவையோ, சட்ட முன்மொழிவையோ கொண்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது, நம் தமிழ்நாட்டில் அதை எந்த அடிப்படையில் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்பதை நான் கேட்கிறேன். ஏனென்றால், இதுவரை மத்திய அரசு எந்தச் சட்ட முன்வடிவையும் கொண்டு வரவில்லை.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இந்தத் தொகுதி மறுவரையறை செயல்படுகிறது என்று நாம் நினைத்தால், இன்றைக்கு தமிழகத்தைவிட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

எனவே, மத்திய, மாநில அரசுகள் இரண்டும் கலந்து, அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் வகையில் சமமாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிலும் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேபோல, 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இடத்தில் 815 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்தத் தொகுதி மறுவரையறையின் மூலம் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அந்த வகையில், 7.2 சதவீதம் என்ற நம்முடைய விகிதாச்சாரம் குறையாமல், நம்முடைய மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு உறுதியாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியும்.

இன்றைய நிலையில் 10 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை இருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் ஏற்படும். அந்த வகையில், மக்களுக்குச் சிறப்பாக நிச்சயமாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற முடியும்.

இப்போது 10 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேலை செய்வதற்கும், 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பணியாற்றுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்த மக்கள் குறைகளை நேரடியாகக் கேட்டு, அதை நாடாளுமன்றத்தில் பேசி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் அதன் மூலம் பல்வேறு விதமான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.

எனவே, இந்த மக்கள் தொகை மறுசீரமைப்பில் உறுதியாக தமிழ்நாட்டுக்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வரும்போது, 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் ஏற்படுவது சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேபோல, பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு பெண் அவை உறுப்பினராகவும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் நான் வரவேற்கிறேன்.

ஏற்கனவே புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் இருந்தபோது, 33 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மாபெரும் பெண்கள் மாநாட்டை நடத்தி, பெண்களுக்காக ஒரு சீருடையை வழங்கி, பெண்களுக்கு மரியாதை கொடுத்தவர் இந்த அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் அவர்கள்.

அந்த வகையில், பெண்கள்தான் இந்த நாட்டின் கண்கள் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இங்கே இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் நிச்சயமாக பின்புலமாக இருப்பவர்கள் யார் என்றால், பெண்கள்தான்.

அந்தப் பெண்கள் நிச்சயமாக அரசியலிலும் கோலோச்ச வேண்டும். இன்றைக்கு எல்லா இடங்களிலும் பெண்கள் வந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, அரசியலிலும் மிகப்பெரிய அளவில் பெண்களை ஊக்கப்படுத்தி வரும் நம்முடைய கட்சிகளுக்கு என்னுடைய நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அவையிலும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். எனவே, முதலமைச்சர் அவர்களுக்கு நிச்சயமாக இந்த நேரத்தில் பெண்கள் சார்பாக நான் நன்றி சொல்லுகிறேன். மேலும், இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த வகையில், பெண்களுக்கு 543 தொகுதிகளில் இருந்து 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், மொத்தம் 179 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். அதற்கு மாறாக, 815 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், 269 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள்.

நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்தால், மொத்தமாக நாடாளுமன்றத்தில் 269 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும்போது, பெண்களுக்கு கூடுதலாக 90 இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதனால், நிச்சயமாக இந்த இரண்டு தீர்மானங்களிலுமே, முதலில் மத்திய அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை பற்றி நாம் ஆய்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற என்னுடைய கருத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி, நிச்சயமாக நமது தமிழ்நாட்டில் இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை 59 நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்த்தி, 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் டெல்லிக்குச் சென்று தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுக்கும்போது, நிச்சயமாக தமிழ்நாட்டை இன்னும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

மக்களுக்கும் மத்திய அரசின் மூலம் கிடைக்க வேண்டிய பணிகளையும், திட்டங்களையும் கொண்டுவர முடியும். மத்திய அரசின் மூலம் மாநில அரசும் நிச்சயமாக அந்தத் திட்டங்களைப் பெற்றுக்கொண்டு செயல்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இதை என்னுடைய கருத்தாகத் தெரிவித்துக்கொண்டு, எனக்கு வாய்ப்பு கொடுத்த நமது மாண்புமிகு பேரவைத் தலைவருக்கு நன்றி கூறி அமருகிறேன் எனக்கூறினார். 

இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... சட்டப்பேரவையை தெறிக்கவிட்ட ‘அந்த’ ஒற்றை வார்த்தை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share