அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!
மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும் அவை உறுப்பினருமான தேவ கௌடா பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பகிர்ந்த கருத்தால் சிரிப்பலை எழுந்தது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு வழிவகுப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவகௌடா பற்றித் தனது பாணியில் நகைச்சுவையாக பேசியது அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
எனக்கு தேவகௌடாவை 54 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். நாங்கள் இணைந்து பல தருணங்களில் பணியாற்றி இருக்கிறோம். அவர் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு" எனத் தனது உரையைத் தொடங்கினார். அதன் பிறகுதான் அந்தக் கலகலப்பான ஜோக்’ வந்தது. பின்னர் ஏன் என்று தெரியவில்லை, அவர் அன்பை எங்களுடன் (காங்கிரஸ்) பகிர்ந்து கொண்டார் (Wo mohabbat humare saath kiye), ஆனால் திருமணத்தை மட்டும் மோடி சாப்புடன் (Shaadi Modi sahab ke sath) செய்துகொண்டார் என அவர் குறிப்பிட்டார்.
கார்கேவின் இந்த திருமண உவமையைக் கேட்டதும், அவையிலிருந்த எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். அங்கிருந்த பிரதமர் நரேந்திர மோடியும் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!
தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS), சமீபத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்ததைத்தான் கார்கே இவ்வாறு கிண்டலாகக் குறிப்பிட்டார். கார்கேவின் இந்தக் கருத்திற்குப் பிறகு கடிதம் மூலம் பதிலளித்த தேவகௌடா, அது காதலோ, திருமணமோ கிடையாது. காங்கிரஸ் கட்சியுடனான எனது உறவு என்பது ஒரு கொடுமையான உறவு. அதனால் தான் நான் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு வெளியேற வேண்டியிருந்தது எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
பதவி ஓய்வுபெறும் நேரத்தில் அரசியல் கசப்புகளை மறந்து, இத்தகைய நகைச்சுவை உரையாடல்கள் அவையில் ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!